• No products in the basket.

3.5 to 3.9 | மரபுத் தமிழ் | திணை மரபு | பால் மரபு | காலம் | இளமைப் பெயர் தொகை மரபு

மரபுத் தொடர்கள்: தமிழ் மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.

பாடலின் பொருள் : இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும். உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.

திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

அளபெடை : புலவர்கள் சில எழுத்துகளை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வழாஅமை, |தழாஅல் ஆகிய சொற்களில் உள்ள ழா என்னும் எழுத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும். அதற்கு அடையாளமாகவே ‘ழா’வை அடுத்து ‘அ’ இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர். இதனைப் பற்றி உயர் வகுப்புகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

மரபுத்தொடர்கள்: நாம் பேச்சிலும் எழுத்திலும் சில மரபுத்தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அத்தொடர்கள் நம்முடைய கருத்துகளுக்கு வலுச்சேர்க்கின்றன. சில மரபுத்தொடர்களுக்கு நேரடிப்பொருள் கொள்ளாமல், அவற்றின் உட்பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.) 1. திண்டுக்கல், பூக்கள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நகரமாக விளங்குகிறது.

கொடிகட்டிப் பறத்தல் – புகழ்பெற்று விளங்குதல்

  1. அவர் ஓர் அவசரக்குடுக்கை.

அவசரக்குடுக்கை – எண்ணிச் செயல்படாமை

பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.

ஆயிரங்காலத்துப் பயிர் – இயலாத செயல்.

கல்லில் நார் உரித்தல் – ஆராய்ந்து பாராமல்.

கம்பி நீட்டுதல் – இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது.

கானல்நீர் – நீண்டகாலமாக இருப்பது.

கண்ணை மூடிக்கொண்டு – விரைந்து வெளியேறுதல்

இருதிணை: ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.

ஐம்பால்: பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால்-பகுப்பு, பிரிவு). இஃது ஐந்து வகைப்படும்.

உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது. அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.

உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்

  • வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால்
  • மகள், அரசி, தலைவி – பெண்பால்
  • மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால்

அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்

  • அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.

எ.கா. யானை, புறா, மலை

  • அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.

எ.கா. பசுக்கள், மலைகள்

மூவிடம்: தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.

வழுவமைதி

இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.

  1. திணை வழுவமைதி: “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.
  2. பால் வழுவமைதி: “வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
  3. இட வழுவமைதி: மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,”இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.
  4. கால வழுவமைதி: குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.

இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.

  1. மரபு வழுவமைதி: “கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்” – பாரதியார்.

குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அறிந்து பயன்படுத்துவோம்:

பறவைகளின் ஒலிமரபு

தொகை மரபு

வினைமரபு

ஆந்தை அலறும்

குயில் கூவும்

மயில் அகவும்

காகம் கரையும்

கோழி கொக்கரிக்கும்

கிளி பேசும்

சேவல் கூவும்

புறா குனுகும்

கூகை குழறும்

மக்கள் கூட்டம்

ஆநிரை

ஆட்டு மந்தை

 

சோறு உண்

தண்ணீர் குடி

முறுக்குத் தின்

பால் பருகு

பூக் கொய் இலை பறி

சுவர் எழுப்பு

கூடை முடை

பானை வனை

 

திணை மரபு: திணை இரண்டு வகைப்படும். அவை 1. உயர்திணை 2. அஃறிணை.

ஆறு அறிவுடைய மனிதர்களை உயர்திணை என்பர்.

பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருள்களை அஃறிணை என்பர்.

பால் மரபு: பால் ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியனவாகும்.

உயர்திணையில்,

  1. ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால். (எ.கா.) மாணவன், செல்வன்.
  2. ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால். (எ.கா) ஆதினி, மாணவி .
  3. ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால். (எ.கா.) மாணவர்கள், மக்கள் . அஃறிணையில்,
  4. ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால்.

(எ.கா.) கல், பசு.

  1. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால்.

(எ.கா.) மண் புழுக்கள், பசுக்கள்.

 

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.